| Anbudan oru nodi - பொங்கல் திருநாள் 2010.. |
|
| |
|
|

பொங்கல் பொருட்களும்
பானைகளும்
பிசாசுகளிடம்
அகப்பட்டுக் கிடக்கிறது
கொஞ்ச நாட்களாக.
பறிப்பிற்கான போராட்டம்
இரத்தம் சொட்டச் சொட்ட.
பொங்கல் பானைகள் முழுதும்
தமிழனின் இரத்தம் நிரப்பப்பட்டு.
பொங்கும் கைகள்கூட
அறுக்கப்பட்டு.
எங்கள் சுவாசங்களை
பறித்த பிசாசுகளிடமிருந்து
எங்களை மீட்கவே
எங்கள் மூச்சுத் திணறுகிறது.
பிறகு எங்கே
சர்க்கரைப் பொங்கலும்
வடையும் வாழைப்பழமும்.
எங்கள் கரங்கள் நிரந்தரமாய்
உணர்விழக்காது.
வேறு எந்த உதவியோ
ஊன்றுகோலோ அற்று
பிரபஞ்சத்தின்
வேர்களை அறுத்தல்லவா
ஆயுதமாக்கி
எதிரியை வழிமறித்துப்
போராடியபடி நாம்.
பிரளயமும் பூகம்பமும்
பூக்களைத் தறித்து மறிக்கும்
இலையுதிர்காலமும்
நீண்டு நிலைப்பதில்லை.
சர்க்கரைப் பொங்கலும்
வடையும் வாழைப்பழமும்
அடிபட்டுத் தின்ற
காலங்கள் மட்டும்
மணம் மாறாமல் மனதோடு.
பொங்கிய முற்றமும்
அந்த மூன்று கற்களும்
ஞாபகக் குறிப்புக்களில் இருந்தாலும்
காணாமல் போன பட்டியலில்.
கறையான் புற்றுக்களும்
பாம்புப் புற்றுக்களும்
மூடிக் காத்து வைத்திருக்கும்
சிலசமயம்
எங்கள் எச்சங்களை.
புராதனமான
நகரம் ஒன்றை உருவாக்குவோம்
புதிய எம் தேசத்தில்.
நீண்ட நெடிய தேடலின்பின்
பொங்கலின் வாசம்
மீண்டும்
முற்றத்துக் கோலம்
மாவிலை தோரணத்தோடு.
அன்றுவரை உறுதியோடு
காத்திருப்புக்கள் தொடரும்
மனதிற்குள் பொங்கியபடி!!!
 |
| Today, there have been 63162 visitors (228134 hits) on this page! |
|
|
|
|